இலங்கைப் பிரச்சனைக்காக மட்டும் வாக்களித்தால்! .....என்னாகும்!

Posted on Sunday, March 29, 2009 by நல்லதந்தி



ஊடகங்களிலும், இணையத்திலும் தமிழகமக்கள் இலங்கைப் பிரச்சனைக்காகவே இந்தப் பாராளுமன்றத்தேர்தலில் வாக்களிக்கப் போவதாக பரபரப்பை ஊட்டிக் கொண்டு இருக்கின்றன. இதனால் இலங்கைப் பிரச்சனையில் தங்களுக்கு பெரும் அக்கறை உள்ளதாகக் காட்டிக் கொள்ள அனைத்துக் கட்சிகளும் தத்தம் சடங்குகளைக் செய்து முடித்து விட்டன. 

இதற்குமுன் பொதுவாக எந்தத் தேர்தலிலும் இலங்கைப் பிரச்சனையை அரசியல் கட்சிகள் முன்நிறுத்தியதில்லை. இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் என்ன செய்யப் போகின்றன என்பது இன்னும் தெரியவில்லை.

ஒரு வேளை தமிழக மக்கள் இலங்கைப் பிரச்சனைக்காகவே வாக்களிக்கப் போவதாக இருந்தால் என்ன நடக்கும்!. அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் சிந்தித்தால் என்ன் ஆகும்!.

திமுக தொண்டர்: இலங்கைப் பிரச்சனையை நினைத்தால் நெஞ்சே பதறுது. வழக்கமாக, தமிழுக்கும், தலைவனுக்கும் தான் உயிர் கொடுத்துகிட்டு இருந்தோம். இப்போ இதுக்கும் சேர்த்தி உயிரைக் கொடுத்துகிட்டு இருக்கிறதைப் பாத்தா நிஜமாகவே எதாவது செய்யணும் போல இருக்கு. பிரச்சனை பெருசானதுக்கு காரணமே காங்கிரஸ்தான் அதனால அதுக்கு ஓட்டுப் போடக் கூடாது. திமுகாவுக்கு ஓட்டு போடலாமுன்னு பாத்தா ஒரு வேளை பி.ஜே.பி ஜெயிச்சி தலைவர் வழக்கம் போல இந்தியாவை மொத்தமா காலி பண்ணலாமுன்னு மந்திரிப் பதவிக்காக தாவ நினைச்சாருன்னா இங்க ஆட்சி போயிடும். திமுக ஜெயிச்சாதானே இந்தப் பிரச்சனை. தலைவரோட ஆட்சியை காப்பாத்த வேறகட்சிக்குத்தான் ஓட்டு போடணும். 

அதிமுகாவுக்கு போடக் கூடாது. தேமுதிகவுக்குப் போடலாமா? வேணாம் அப்புறம் அவங்க வளந்துட்டா, நம்ம ஸ்டாலின், ஸ்டாலினோட மகன்,அழகிரி, அழகிரியோட மகன்,மகள், க்லாநிதி, கனிமொழி, அவுங்க மகன், மு.க.முத்து, அவுங்க மகன், தயாநிதி, அன்புநிதி, அறிவுநிதி,உதயநிதி, இம்சைநிதின்னு இன்னும் எத்தனை நிதி இருக்காங்களோத் தெரியிலை. அத்தனை பேரும் வசதியில்லாம நடுத்தெருவுக்கு வந்து கஷ்டப் படுவாங்க. விஜயகாந்தோட மாமன் மச்சானுங்கதான் நல்லா இருப்பாங்க. 

தமிழனை தமிழந்தான் அழிக்கணுங்கற கொள்கை என்னாகும். அப்போ மிச்சம் இருக்கிறது பி.ஜே.பி தான் அவுங்களும் இலங்கைப் பிரச்சனையில ஆர்வமாத்தான் இருக்காங்க. போனாப் போயிட்டு போவுது இந்த தடவை அவங்களை ஜெயிக்கவெச்சு இலங்கை பிரச்சனையை தீர்த்து புடலாம்.

அதிமுக தொண்டர்: இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்க என்ன பண்றது. நம்ம கட்சிக்கு ஓட்டு போட்டா ஒரு அம்மா மூணாவது அணி நாலாவது அணின்னு போயிட்டாங்கன்னா?. அதுக்கப்புறம் அந்த அணிப்பிரச்சனையைத் தீர்க்கவே நேரம் போயிடும். இலங்கைப் பிரச்சனைக்கு அம்மாவால நேரத்தை ஒதுக்கவே முடியாதே!. 

இந்த மூணாவது அணியச் சேர்க்கிற தேவகவுடா கும்பல் நல்ல காலத்திலேயே தமிழனுக்கு நல்லது செய்ய மாட்டாங்க. மூணாவது அணியை நம்புறது வேஸ்ட். காங்கிரஸுக்கு எப்படி போடறது இலங்கைப் பிரச்சனையில எதிரியே இவங்கதானே, அப்புறம் தானே இராஜபக்‌ஷே. திமுகவுக்கு நான் சுடுகாடு போனாலும் ஓட்டு போடமாட்டேன். 

விஜயகாந்து, ச்ச்சீ வேணாம். இந்த ஆளுக்கு என்னமோ நம்ம அம்மான்னு நினைப்பு. நான் கையை நீட்டறவனுக்கு ஓட்டு போடுன்னு சொல்றாரு. அம்மா டயலாகை அம்மா மட்டும் தானே பேசணும். அப்புறம் மிச்சம் இருக்கிறது. பி.ஜே.பி தான்!. சரி ஓட்டு ஏன் வேஸ்டா போவுணும் நான் போடாட்டாஅப்புறம் அழகிரி கும்பல் எப்படியும் போட்டும். அதனால பி.ஜே.பிக்கே போட்டு வைக்கலாம். 

ஒருவேளை எலக்‌ஷன் முடிஞ்சி அவங்க ஆட்சிக்கு வந்தா கருணாநிதி கவர்மெண்ட்டை டிஸ்மிஸ் செய்ய வைக்க அம்மா. பி.ஜே.பி யோட சேர்ந்தாலும் சேரலாம்.  அதனால இலங்கைப் பிரச்சனையும் போனாப்போவுதுன்னு தீர்ந்தாலும் தீரலாம்.

காங்கிரஸ் தொண்டர்: என்னய்யா இது!  எவனைக் கேட்டாலும் காங்கிரஸ் தான் இலங்கைப் பிரச்சனைக்குக் காரணமுன்னு சொல்றானுங்க். நம்ம ஆளு ஒருத்தன் தீக்குளிச்சி செத்தபுறம் விட்டுடிவானுங்கன்னு நினைச்சா!, அது இன்னும் வேகத்தை கிளப்பிடுச்சி!. அந்தாளு தீக்குளிச்ச மாதிரி நானும் தமிழந்தான்னு நிரூபிக்க காங்கிரசுக்கு ஓட்டு போடாம இருந்தாத்தான் ஆவும் போலிருக்கு!. 

யாருக்குப் போடலாம் திமுகவுக்கு போட முடியாது. மொத்தப் பிரச்சனையும் அந்தாளாலேதான். அவரு நல்லவராகாட்டிக்க மொத்தப் பழியையும் காங்கிரஸ் மேல தானே போடறாரு!. இல்லேன்னா இந்த திருமாவளவன் காங்கிரஸ் ஆபிஸிலையே நம்மளை அந்தக் குத்து குத்துவாரா?. இதுக்கா வேண்டியே திமுக வுக்கு வோட்டு கிடையாது. 

அம்மாவுக்குப் போடலாமா?. அது நல்லாத்தான் இருக்கும் ஆனா அவரு சோனியாவைப் பத்தி பல உண்மைகளை ஜனங்ககிட்டயே சொல்லிடறாரு. காங்கிரஸ் கொள்கையேஅவருக்குத் தெரியிலை. நாம ஆபிஸூக்குள்ளாறதானே அடிச்சுக்குவோம். 

தேமுதிக வுக்கு போடலாமுன்னா அந்தாளு நம்ப வெச்சி கழுத்தறுக்கிற பாலிஸியே நம்ப கிட்டயே காட்டுறாரே!. அது காங்கிரஸுக்குத் தானே சொந்தம். சிறுத்தைகளுக்கு எப்படி போடறது. அவனுங்க குத்தின குத்து இன்னும் வலிக்குதே!. பா.ம.க வேணாம், நம்ப குணம் அப்பிடியே இருக்கு!. 

மீதி... பி.ஜே.பி தான் ...அதான் நல்லது நாம பண்ணின குழறுபடியை அஞ்சி வருஷம் உக்காந்து கஷ்டபட்டு சரி செஞ்சி அதனால ஜனங்ககிட்ட கெட்ட பேரு எடுத்திகிட்டு வரட்டும். அப்புறம் நாம ஜாலியா உக்காந்துகிலாம். அதனால பி.ஜே.பிக்கே ஓட்டு போடலாம். நாட்டுப் பிரச்சனையோட, இலங்கைப் பிரச்சனையும் சேத்தி வெச்சிகிட்டு திண்டாடட்டும்.

தேமுதிக தொண்டர்:  இவரு கை காட்ற இடத்தில குத்தலாமுன்னா அங்கே என்னா இராஜபக்‌ஷே மூக்கா இருக்கு?.... ஆங்!..போன சட்டசபை எலச்ஷனிலேயே ஒரேஒரு தொகுதி தானே கெலிச்சாரு?. மேலே இருவுரு போனாலும் ஒண்ணியும் நடக்காதுன்னு தெரியுது. ஆங்!...அப்புறம் போய் மேல இருக்கிறவுங்களைக் கெஞ்சணும்.  அங்க காங்கிரஸ் தான் பிரச்சனையன்னா அடுத்தாப்புல வர்றது பி.ஜே.பி தானே. நமக்கு இலங்கை பிரச்சனைய தீக்கிறத்துக்கு அடுத்தாப்புல யாரு மேல வர்றாங்களோ அவிங்கதானே? ஆங்....

நாம எப்படியும் தமில் நாட்டில தானே ஆச்சி பன்ன போறொம் . அண்ணனும் இந்தத் தேருதல்ல நிக்க மாட்டேன்னுதானே சொன்னாரு!.அப்ப இந்த ஓட்டு அண்ணனுக்கு எதுக்கு போட்டுகிட்டு, நாம்பளே,  அது வேணாம், இதுவேணாமுன்னுட்ட்டு தானே இவருக்கு ஓட்டு போடறோம். அதானால சும்மா போற உடம்புல பம்பரம் விட்டாக்க தப்பு இல்லன்னு தலைவர் சொன்னா மாதிரி வீணாப் போற ஓட்டை வீணாப் போற பி.ஜே.பிக்கே போட்டுறலாம் ஆங்...... 

பா.ம.க. தொண்டர்: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா! என்னால தாவ முடியில!. ஒரு தடவை தாவினா....சரி போவட்டும்ன்னு விட்டிடலாம். இத்தினி தாவுக்கு ஒடம்பு தாங்கிலயே!. அன்பு மணி அண்ணணாவது மல்டி ஸ்பெஸாலிடி ஆசுபத்திரிக்கு வந்து நம்பளை விசாரிச்சி இருக்கலாம்.  நம்ப கொள்கையே இ.காங்கிரஸின் வாரிசு கொள்கையைத்தானே எதித்து இருந்திச்சி!. மோதிலாலாம், சவகருலாலாம், அப்புறம் இந்திராவாம், சன்சையாம், பின்னே இராசிவாம். இதை எதிர்த்துதானே அரசியலைத் தொடங்கினோம். இதே வாரிசு அரசியல் என் கட்சியில் நடந்தால் சவுக்கால அடிப்போம், முச்சந்தியில் உதைப்போம் முன்னு சொன்னீங்க!. 

இப்ப உங்க வூட்டாளுங்களைத் தவிர யாரும் வரமுடியிலையே!. சவுக்க எங்கே ஒளிச்சி வெச்சிருகீங்கன்னே தெரியலை. நீங்களே மொத்த காங்கிரஸ் கொள்கையையும் குத்தகைக்கு எடுத்து இருக்கீங்க!.சரி விடுங்க. இலங்கைப் பிரச்சனைக்காக நீங்க இந்த காங்கிரஸ் அரசை விட்டுட்டு முன்னாடி வந்து இருக்கலாம், அதையும் நீங்க பண்ணலை. பண்ணவும் மாட்டீங்க!. வேற எதுக்கு ஓட்டு போடலாமுன்னு பாத்தா காடு வெட்டிய கண்டம் பண்ணதால திமுக வேணாம். 

அம்மா இப்பத்தான் இலங்கைப் பிரச்சனையில் நுழைஞ்சதாலே அதிமுகவும் வேணாம். தேமுதிக நம்ப பரம்பரை எதிரி அதனால அதுவும் வேணாம். மிச்சமிருக்கிறது, பி.ஜே.பி தான். அதுக்கே போட்டுத் தொலையுறேன். இதிலையும் நம்ப கொள்கைதான் நீங்க காங்கிரஸை எப்பவுமே கன்னா பின்னான்னு திட்டி இருக்கீங்க!. இது வரைக்கும் பி.ஜே.பி யை திட்டி நான் பாத்ததே இல்லை. நீங்க பிற்பாடு ஒட்டறதுக்கு வசதியாயிருக்குமுன்னு அதுக்கே ஓட்டு போடப்போறேன்.

திருமாவளவன் தொண்டர்: அண்ணன் சொல்லறது காங்கிரஸை அழிக்கணுமுன்னு, அப்போ காங்கிரஸசுக்கு ஓட்டு போடக்கூடாது. அதனால காங்கிரஸ் கட்டிக் காப்பத்திற அரசுக்கும் ஓட்டு போடக்கூடாது. அப்படியன்னா அது திமுக அரசு!. ..சரி திமுகவுக்கும் ஒட்டு கிடையாது. மிச்சம் இருக்கிறது நம்ப அண்ணன், அவர் திமுக சப்போர்ட் அதனால அண்ணன் சொன்னபடி அவ்ருக்கே கூட ஓட்டு போடகூடாது. வேற யாருக்குப் போடலாம். 

அம்மாவுக்குப் போடலாமுன்னா அண்ணனுக்குத் தெரிஞ்சா பிரச்சனையாயிடும்.  தேமுதிகவுக்கு போடலாமா? .. வேணாம். அவரு பா.ம.கா வுக்கே பிரச்சனையாவும் போது நமக்கும் பிரச்சனையாவலாம். சரி... இருக்கவே இருக்கு பி.ஜே.பி. அவங்களுக்கு ஓட்டு போட்ட நாளைக்கு நமக்கு எந்தப் பிரச்சனையும் வராது. அப்படியே தெரிஞ்சதுன்னாலும், ஒரு வேளை அவுங்க மேலஆட்சி புடிச்சிட்டா நம்மளை அண்ணணே பாரட்டுவாரு!. காங்கிரஸ் எதிரின்னா பி.ஜே.பி நண்பன் தானே!

பி.ஜே.பி தொண்டர்: அப்போ இலங்கையில எதோ பிரச்சனை இருக்கத்தான் செய்யும் போலிருக்கு!. இல்லையன்னா நம்ம தலைவருங்க அறிக்கை விடுவாங்களா?. எதா இருந்தாலும், நாம பி.ஜே.பிக்குதான் ஓட்டு போடணும். 

அவுங்களுக்கு நம்மை உட்டா வேற யாரும் கதி இல்லையே!. நமக்கும் தமிழ் இரத்தம் தானே ஓடுது!. இலங்கைப் பிரச்சனையை நாம தீர்த்தே ஆகணும். நாம ஆட்சிக்கு வந்தா இந்தப் பிரச்சனையைத் தீர்க்காட்டியும் அடுத்த ஆட்சி வர்ற வரைக்கும் பிரச்சனையில்லாம மெயிண்டைன் பண்ணா பத்தாதா?. அப்புறம் அவங்களாச்சி பிரச்சினையாச்சி!.

எலக்‌ஷன் முடிஞ்சி ரிசல்ட் அன்னிக்கு “ அண்மைச் செய்தி” .

40 தொகுதிகளில் நிற்க ஆளில்லாமல் தடுமாறித்தவித்து பிறகு பி.ஜே.பி பல கட்சிகளைத் தயாரித்து கெளரவத்திற்கு கூட்டணி அமைத்துக் கொண்டது தெரிந்ததே!. தற்போது நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அக்கட்சியும் அதனுடைய கூட்டணி கட்சிகளும் அமோக வெற்றி பெற்றுள்ளன. 

ப.ஜ.க - 20 ( பாரதீய ஜனதா கட்சி)

அ.இ.ச.ம.க (?) ( ஸ்ஸ்ஸப்பா)-  அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி  சரத்குமார் பிராண்ட் - 10

அ.இ.ந.க(?) (ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா)- அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி  கார்த்திக் பிராண்ட் - 10

மொத்தம் நாற்பதிற்கு நாற்பது வென்றுள்ளன!

கொட்டாவி விடுவதற்காகவாவது வாயைத் திறந்திருக்கலாம்!

Posted on Friday, March 27, 2009 by நல்லதந்தி





பாராளுமன்றத்தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. புதிதாக எம்.பி ஆகும் ஆசையுள்ளவர்கள் பணத்தைக் காட்டி சீட்டு வாங்க பறப்பதும், ஏற்கனவே எம்.பி ஆக உள்ள பழம் பெருச்சாளிகள் பணம் + தாங்கள் தொகுதிக்குச் செய்த சாதனைகளையும்(?) சொல்லி சீட்டு வாங்கத் துடிக்கிறார்கள்.

ஆனால் நமது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. தங்கபாலு செய்த சாதனை என்னத் தெரியுமா? 

பாராளுமன்ற இணையதளம் தருகிற தகவல்களின்படி, இரு தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் எந்தக் கேள்வியையும் எழுப்பவில்லையாம். அவர்களில் ஒருவர் தமிழக காங்கிரஸ் தலைவரும், சேலம் தொகுதி எம்.பியும், இரண்டு முறை இணை அமைச்சராக இருந்த திரு.தங்கபாலு!. 

ஒருவேளை இந்தச் சாதனையைச் சொல்லித்தான் இந்த முறை ஓட்டு கேட்கப் போகிறாரோ?. அட பேச வேணாம், ஒரு கொட்டாவி விடுகிறதுக்காகவாவது வாயைத் திறந்திருந்தால் இந்த பேச்சு வந்து இருக்குமா?. 

கலைஞருக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்கள்!

Posted on Sunday, March 22, 2009 by நல்லதந்தி




1. கலைஞர் அய்யா ஸ்டாலினை மதுரை ஒருவர் கொல்லப் பாய்ந்தார், அதுனால ஸ்டாலின் அவர்களோட பாதுகாப்பு பூனைப்படை, ஆனைப்படையெல்லாம் போட்டீங்க சரி... அப்புறம் அந்த ஒருவரு என்ன ஆனாருங்க!. அவரைக் கண்டு பிடிக்கப் போட்ட போலீஸ் அதிகாரி என்ன ஆனாருங்க?.

2. அதே மதுரையில தினகரன் பத்திரிக்கைய யாரோ அடிச்சி நொறுக்கி தீ வெச்சாங்களே!. அதுலகூட ஒரு மூணு பேரு செத்தாங்களே. அதுக்கப்புறம்... அந்த பத்திரிக்கை ஆபீஸெ ஏன் நொறுக்குனாங்க, ஏன் அந்த மூணு பேரக் கொன்னாங்க அப்படின்னு நம்ம போலீசுகாரங்க கண்டு பிடிக்க ரொம்ப திணறுராங்கன்னு அனுதாபப் பட்டு சிபிஐ இதை விசாரிக்கட்டும்னு சொல்லி சிபிஐ கிட்ட ஒப்படைச்சீங்களே சிபிஐ காரங்க எதாவது கண்டுபிடிச்சி உங்கக்கிட்ட சொன்னாங்களா?

3. ஒகேனக்கல் பிரச்சனையில் முதுகெலும்பை முறிச்சாலும் விடமாட்டோமன்னு சொல்லி சில நடிகர்களோட முதுகையும், சில டைரக்டருங்க முதுகையும் கர்நாடகாப் பக்கம் போக விடாம நீங்க முறிச்சீங்களே!. அதுக்கப்புறம் கர்நாடகாவில எலக்‌ஷன் முடிஞ்சதும் ஒகேனக்கல் திட்டத்தை முடிப்போமுன்னு சொன்னீங்களே கர்நாடகாவில எலக்‌ஷன் முடிஞ்சி ஒரு வருஷம் ஆகப்போகுதே, இன்னும் எலக்‌ஷன் முடிஞ்ச தகவல் இன்னும் உங்களுக்குக் கிடைக்கலையா?

4. ஜனாதிபதி எலக்‌ஷனப்போ திருமதி.பிரதீபா பாட்டிலை நிறுத்த முடிவு செஞ்சப்போ, தமிழனான திரு.அப்துல் கலாமுக்கு ஆதரவு தராம இருக்க, பிரதீப் பாட்டீல் இன்ன இன்ன செய்வார் அப்படின்னு பட்டியல் போட்டீங்க. அதுல பிரதீப் பாட்டீல் ஜனதிபதியா ஆனா “மகளீர் இட ஒதுக்கீடு” மசோதாவிலதான் முதல் கையெழுத்து போடுவாருன்னு சொன்னீங்க. பிரதீப் பாட்டீல் இன்னும் முதல் கையெழுத்து போடலையா?. அதில எதாவது தகவல் உங்களுக்குத் தெரியுமா?

5. உங்க அமைச்சரவையில அமைச்சரா இருந்தாரே தா.கிருட்டிணன். அவரு கொலையில உங்க மகன் உட்பட பல பேர் குற்றவாளிகளா இருந்தாங்க. என்ன நடந்திச்சின்னு தெரியலைங்க. அதில யாருக்கும் சம்பந்தமில்லையன்னு எல்லோரும் விடுதலையாயிட்டாங்க. அப்போ தா.கிருட்டிணன் நடு ரோட்டில அரிவாளாலாலே தன்னைத் தானே வெட்டிக் கிட்டு தற்கொலை செஞ்சிக்கிட்டாராங்க?

5. ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனை முடிஞ்சு போன விஷயம் அப்படின்னு நீங்க சொன்னவுடனே பத்திரிக்கைகாரங்களும் நம்பிக்கிட்டு இப்போ அதைப் பத்தியெல்லாம் பேசறதே இல்லை. நிஜமாவே ஸ்பெக்ட்ரம் பிரச்சனை முடிஞ்சு போச்சா?. இவ்வளவு வேகமா பிரச்சனையை தீர்க்கிற நீங்க இலங்கைப் பிரச்சனையும் முடிஞ்சி போச்சு அப்படின்னு சொல்லிட்டா பத்திரிக்கைகாரங்க நம்ப மாட்டாங்களா?. ஏங்க இன்னும் சொல்லாம இருக்கீங்க?

6. அழகிரியும் முரசொலி மாறனுடைய மகன்களும் அடிச்சிக் கிட்டு இருந்தப்போ குடும்ப விஷயத்தைப் பக்கம்பக்கமா பத்திரிக்கையில கவிதையாவும், கட்டுரையாவும் அழுதுகிட்டும் மாறன் கும்பலை திட்டிகிட்டும் எழுதினீங்க, இப்போ அவங்க ரெண்டு பேரும் எந்த விஷயத்தால ஒண்ணு சேந்தாங்கன்னு ஏங்க எழுத மாட்டேங்கிறீங்க?

7. பூங்கோதை அப்படின்னு ஒரு அமைச்சர், வழக்கம் போல அவர் அமைச்சரின் அன்றாட பணியைச் செய்ததால நீக்கினீங்க. அவருடைய செயல் உங்களை மிகவும் அவமானப் படுத்துவதாகவும் சொன்னீங்க. திரும்பவும் உங்க அமைச்சரவையில சேர்த்துக் கிட்டு இருக்கீங்க்களே!. அவர் செஞ்ச செயலால உங்களுக்கு ஏற்பட்ட அவமானம் போயிடுச்சாங்களா?. அந்த அவமானத்தை கழுவ அவர் உபயோகிச்ச “சோப் ”என்னாங்க?

8. தமிழைச் செம்மொழியாக்குவோம் அப்படின்னு அடிக்கடி ஜனங்களை உசுப்பேத்துவீங்களே, இப்போ தமிழ் செம்மொழியாகி ரெண்டு, மூணு வருசமாயிடுச்சீங்களே. அதனால தமிழுக்கு என்ன நன்மை கிடைச்சதுன்னு இன்னிய வரைக்கும் யாருக்கும் தெரியலைங்க?. உங்களுக்கு எதாவது நன்மை கிடைச்சுதாங்களா?

9. முல்லைப் பெரியாறு, பாலாறுன்னு அடிக்கடி பேசுவீங்களே, இப்போ வாயையே நீங்க திறக்கரதில்லையே? ஏங்க!... பாலாற்றில ஆந்திர காங்கிரஸ் அரசு எல்லாத் தடுப்பணையையும் கட்டி முடிச்சப்புறம் தான் பேசுவீங்களா?

10. கடைசியா .. நீங்க சில விஷயத்துக்கு உயிரை கொடுக்கிறேன்னு சொல்லும் போது எனக்கே சிரிப்பாயிடுதுங்க. நீங்க உங்களோட அறிக்கையை எழுதும் போது நீங்க மட்டும் சிரிப்பீங்களா? அல்லது அதை நம்புற தமிழர்களை நினைச்சி உங்க வீடே சிரிப்பாச் சிரிக்குமா?

பாராளுமன்றத்தேர்தலில் திமுக-காங் கூட்டணியை வெற்றி பெற வைக்கக் காரணங்கள்!

Posted on Tuesday, March 17, 2009 by நல்லதந்தி



பாராளுமன்றத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெறவைத்தாக வேண்டும். அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கலைஞர் சொல்லும் காரணங்கள் நமக்கும் மிகவும் நியாயமாகப் படுகின்றன.

மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே கூட்டணி ஆட்சி இருந்தால் பல நன்மைகள் தமிழகத்திற்குக் கிடைக்குமாம். தமிழகத்தின் நலனுக்காக மத்திய அரசை மிரட்டி மிரட்டி பல சலுகைகள் பெறலாமாம். முக்கியமான இலாகாக்களைப் பெற்று தமிழகத்தை முழு மூச்சாக முன்னேறச் செய்யலாமாம்.
எனவே ஒட்டு மொத்த தமிழக நலனுக்குக்காக அரசியல் மாறுபாடு இல்லாமல் இந்தக் கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டுகிறோம். இந்த வெற்றியால் தமிழகத்திற்கு கிடைக்கும் நன்மைகளாவன. பின் வருமாறு:

முல்லைப் பெரியாற்றுப் பிரச்சனையில் தமிழகத்திற்கு சாதகமாக மத்திய அரசு நடந்து கொள்ளும் இல்லாவிட்டால் மத்திய அரசின் சிண்டையைப் பிடித்து உலுக்கப் படும்.

காவிரிப் பிரச்சனை மத்திய அரசால் தமிழகத்தின் பக்கமாக தீர்க்கப் படும்.

பாலாற்று பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்தின் நலனுக்காகப் பாடுபடும்.

ஒகேனக்கல் பிரச்சனையில் தமிழகத்தின் நலன் காக்க தீர்ப்பு கொடுக்கப் படும்.

சேது சமுத்திரத் திட்டம் ஒரே நாளில் முடிக்கப் படும்.

இலங்கைத் தமிழர் பிரச்சனை ஒரு வாரத்தில் தீர்த்து வைக்கப் படும்.

சேலம் இரயில்வே கோட்டத்திற்கு கட்டிடங்கள் கட்ட எப்படியாவது 50 எக்கர் நிலம் கண்டு பிடிக்கப் படும். சேலத்தில் எங்குமே நிலம் இல்லாவிட்டால் கொட நாட்டில் ஜெயலலிதா வளைத்துப் போட்டுள்ள மக்கள் எஸ்டேட்டில் இருந்து 50 ஏக்கர் பறிமுதல் செய்து கோட்டத்துக்காக வழங்கப்படும்.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மத்திய அரசால் நிதி ஒதுக்க வைக்கப்படும்.

என்னையா இது கிண்டல் பண்றீங்களா!, என்கிறீர்களா அப்பாவி மக்களே!.....

2004-ல் பாராளுமன்றத்தேர்தல் பிரச்சாரத்தில் கலைஞரும், அடிப்பொடிகளும் மேற்கண்ட வாக்குறுதிகளை அள்ளி வீசினர். வாக்குறுதிகளின் ஃபார்மெட் கொஞ்சம் முன்னே பின்னே மாறி இருக்கலாம்.

அந்த தேர்தல் முடிந்து 40 தொகுதிகளும் உங்களுக்கே என்று மக்கள் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு அள்ளிக் கொடுத்தனர். மாறக இந்த கூட்டணி கும்பல் மக்களுக்கு, நாற்பது எங்களுக்கு, நாமம் உங்களுக்கு என்று நடத்திய நாடகத்தை எல்லோரும் அறிவார்கள்.

மேற்கண்ட ஆட்சி முடிந்து அடுத்த தேர்தலும் வந்து விட்டது. இந்தத் தடவையும் இந்தக் கும்பல் இதே வாக்குறுதியுடன் ஓட்டுக் கேட்க வருவார்கள் என்பது நிச்சயம்.

கலைஞரைப் பொறுத்தவரை இந்த வாக்குறுதிகளை 2014 பாராளுமன்றத்தேர்தலிலும் உபயோகப் படுத்துவார். சொன்னதைச் செய்வார், செய்வதைச் சொல்வார் எங்கள் சொல்லின் செல்வர் கலைஞர்!.

சொன்னது போலவே திருமங்கலத்தில் அச்சடித்தாற் போல நாற்பதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தனர். ஸ்பெக்ட்ரம் போல பல ஊழல்களைச் சொல்லாமலேயே செய்தனர்.

 கலைஞர் இந்த ‘பஞ்ச்’ டையலாகைப் பயன் படுத்துவதை விட , ‘என்றைக்கும் “வாக்கு” மாறமாட்டார் எங்கள் கலைஞர்’ என்ற பஞ்ச் டையலாகைப் பயன் படுத்தலாம். கொஞ்சம் பொருத்தமாக இருக்கும். :)

மக்கள் “நலன்” என்று சொல்லிப் பாருங்கள் உதடுகள் ஒட்டாது. மக்களுக்கு “நாமம்” என்று சொல்லுங்கள் உதடுகள் பச்சக்கென்று ஒட்டும். ஒற்றுமையே பலம் என்று விளக்குவதற்காக கூட்டணி கும்பல்களிடம் இந்த பொன்மொழியை வாழும் வள்ளுவம் உபயோகிக்கலாம்.

வாழ்க கலைஞர்!, வளர்க மக்களின் மறதி!

துக்ளக் சோ இராமசாமியும் அவருடைய ஆய்ந்த ஆண்மையும்!

Posted on Sunday, March 15, 2009 by நல்லதந்தி



இந்த வாரம் ஜெயா டிவியில் திரும்பிப்பார்க்கிறேன் என்கின்ற நிகழ்ச்சியில் “சோ” வின் மலரும் நினைவுகளைக் காட்டினார்கள்.
திங்கள் முதல் வெள்ளி வரை என்றாலும் அந்த நிகழ்ச்சி நிமிடத்தில் முடிந்தது போல் ஒரு உணர்வு. சோவின் நகைச்சுவை உணர்வும், தைரியமும்,  நமக்கு தெரிந்ததுதான் என்றாலும், அதை அவர் வாயாலேயே சில சம்பவங்களைச் சொல்லக் கேட்கும் போது நமக்கு எற்பட்ட மகிழ்ச்சியே தனிதான்!.

காமராஜருடன் அவருக்கு ஏற்பட்ட மோதலை அவர் விவரித்தார். அவருடைய நாடகத்திற்கு அரசு அனுமதி தராத சூழ்நிலையையும் (அப்போதெல்லாம் போலீஸ்தான் அனுமதி தர வேண்டுமாம்), பிறகு அவர் அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தவுடன், அரசு வழக்கறிஞர் போன்றவர்களே அரசு பக்கம் நியாயம் இல்லை. அதனால் சோ பக்கம்தான் தீர்ப்பு ஆகும் எனவே, அவ்ருடைய நாடகத்திற்கு அனுமதி தந்துவிடுவதுதான் உத்தமம், என்று கூற, பிறகு அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில், ...அப்போது நிச்சயமாக தமிழகத்தில் காங்கிரஸ் அரசுதான் இருந்து இருக்கும். ஆனால் முதல்வர் காமராஜரா..பக்தவச்சலமா.. தெரியவில்லை. நிகழ்ச்சி நடந்த சமயம் சோ புகழ் பெறுவதற்கு முந்தைய காலமென்றால் (அதாவது திரைப் படங்களில் ,..நாடகத்தைப் பொறுத்தவரை அவர் அப்போதே புகழ் பெற்றுதான் இருந்தார்)நிச்சயமாக அப்போதைய முதல்வர் காமராஜராகத் தான் இருக்க வேண்டும்.

அன்றைய நாடகத்திற்கு சிறப்புவிருந்தாளி திரு. காமராஜர். அருகில் வந்தமர்ந்த சோ வும் காமராஜரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாடகத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வில்லை, ஆனால் சோ போராடிபெற்று இருக்கிறார் என்று அப்போது பேசிக்கொண்டிருந்த திரு.ஜெமினி கணேசன் சொன்ன போது காமராஜர் சோ விடம் கேட்கிறார், இதுநிஜமா? என்று சோவும் ஆமாமென ஆமோதிக்க ஆரம்பிக்கிறது பிரச்சனை.

காமராஜர் சோவிடம் நீ அதிகப் பிரசங்கித்தனமாக எதோ எழுதியிருப்பாய் அதனால்தான் அதிகாரிகள் அனுமதிவழங்க மறுத்திருப்பார்கள் என்று சொன்னார். நான் இந்த நாடகத்தில் இதுவரை எந்த மாற்றமும் செய்யவில்லை, அப்படியிருக்க எதனால் அதிகாரிகள் அனுமதி வழங்கினார்கள் என்று கேட்க,இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் காமராஜர் சோ விடம் கோபித்துக் கொள்ள, அந்த நிறைந்த அரங்கத்தில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே காமராஜர் அரங்கை விட்டு எழுந்து போய்விட்டார்.

மறுநாளில் இருந்து சோவிற்கு அலுவலகத்திலும்,அவருடைய வீட்டிலும் பல பிரச்சனைகள். (இன்றைய முதல்வர் ஏற்படுத்துவது போல் அல்ல! :)காமராஜருக்கும் அந்தப் பிரச்ச்னைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.) ஆனாலும் தான்செய்த்தது சரியே என்ற நிலையிலேயே சோ நின்றார். அந்த அளவிற்கு மாபெரும் ஆண்மையாளர் திரு.சோ. விஷயம் என்ன ஆனது என்கிறீர்களா!. இந்தப் பிரச்சனையில் திரு.காமராஜரே தலையிட்டு சோ வின் மீது குற்றமில்லை என்று சொன்ன பிறகு தீர்ந்தது.

இன்னொரு சம்பவம் இயக்குனர் திரு.நீலகண்டன் ஒரு முறை சோவிடம் உன்னுடைய பத்திரிக்கை எப்படி போகிறது என்று கேட்க, சோவும் நல்லமுறையில் போகிறது என்றுசொன்னார். கலைமகள் பத்திரிக்கை எப்படிப்போகின்றதென அவர் கேட்க சோவும் சுமாராகப் போகிறது என்று சொன்னார். அடுத்து மஞ்சரி எப்படிப் போகிறதென்று அவர் கேட்கசோவும் அதுவும் சுமாராகப் போகிறது என்று சொன்னார்.

அத்தோடு நீலகண்டனுடைய வாய் சும்மாஇருந்து இருக்கலாம்.  வாயைக் கொடுத்து வேறெதையோ புண்ணாக்கிக் கொள்வதைப் போல, துக்ளக் போன்ற பத்திரிக்கையெல்லாம் நன்றாகப்போகின்றன. ஆனால் கலைமகள் போன்ற நல்லப் பத்திரிக்கையெல்லாம் சரியாகப் போவதில்லைப் போலிருக்கிறது என்றார்.

அப்போது, திரு.எம்.ஜி.ஆர் பக்கத்தில் இருக்கும் போதே சோ சொன்னது பல நல்லப் படங்கள் எல்லாம் ஓடாமல் போகும் போது “என் அண்ணன்” எப்படி ஓடுகிறதோ அதைப் போலத்தான். எம்.ஜி.ஆர் பக்கத்தில் இருக்கும் போது இப்படி சொல்ல என்ன’தில்’ வேண்டும். சோ இப்படிச் சொன்னவுடன் என்.ஜி.ஆரே சிரித்து விட்டு நீலகண்டனிடம், இவரிடம் வாயைக் கொடுத்து உங்களால் மீளமுடியுமா? என்றுக் கேட்டாராம்.

இதையெல்லாம் எதுக்கு சொல்றே அப்படின்னு கேட்கறீங்களா?. சமீபத்தில் ஆண்மையைப் பற்றி ஒரு பேச்சு வந்த போது இது தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது.
திமுக தலைவர்களைப் போல் ஒண்ணுக்கு மூணு கட்டுறதுதான்...மன்னிக்க .. சேர்த்துகிறது ஆண்மையோ என்னவோ தெரியிலையே. அல்லது உயிரைக் கொடுப்பேன் அப்படின்னு சொல்லறதுதான் ஆண்மையோன்னு தெரியிலை (அம்மா! கொல்றாங்களே இதிலெ சேர்த்தியில்லை! :) )

1975-ல் இந்திராகாந்தி நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த போது கூட வாய் திற்க்கப் பயப்பட்டவர்கள்,ஆட்சியைக் கலைத்து விடுவார்களோ என்று பயப்பட்டவர்கள்.இத்தனைக்கும் அன்றைய திமுக அரசுமுடிய ஒரிரு மாதங்களே இருந்த நிலையில், (ஒரு நாள் கூட பதவியில்லாமல் இருக்க முடியாதில்ல)  ஆட்சியை கலைத்தவுடன் மிசா,கிசா என்று பட்டம் போட்டு புலம்பிய ஆண்மையாளர்களுக்கு மத்தியில் நெருக்கடி நிலையை எதிர்த்த (குமுதம், ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகள் இதை ஆதரித்துத்தான் பிழைப்பை ஓட்டின) ஆண்மையில்லாத சோ போன்றவர்கள் நாட்டுக்குத் தேவை.

எதாவது பொழுது போகாத பெருசைக் கேட்டுப் பாருங்க. சும்மா இந்தப் பொழப்பு பொழைக்கிறதுக்கு உசிரை விட்ருலாங்க, அப்படிம்பார் அந்த மாதிரி சும்மா பெனாத்துரதுதான் ஆண்மையின்னா..... (கலைஞருன்னா உயிரை நமக்காகத் தருவதாகச் சொல்வார், அதை வெச்சிக்கிட்டு என்னாங்க பண்றது! :) ) .........என்னத்த சொல்றதுங்க!.

(துக்ளக்கில் சிட்டுக்குருவி லேகிய விளம்பரங்கள் வருவதற்குக் காரணம் ஒரு வேளை திமுகவினர் விடாமல் படிப்பதால் இருக்குமோ? :)

பி.கு.: இது எதிர் பதிவல்ல!